ஆன்லைன் மூலமாக மின்கட்டணத்தை செலுத்துமாறு மின்வாரியம் பொது மக்களுக்கு வேண்டுகோள்
By: vaithegi Wed, 10 Aug 2022 3:20:48 PM
சென்னை: தமிழகத்தில் கூடிய விரைவில் பொதுமக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் உயரவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். மேலும், தமிழகத்தில் உள்ள குடிசைகள் மற்றும் 100 யூனிட் வரை உபயோகிப்பவர்களுக்கு மின்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.
இதையடுத்து விசைத்தறிகளுக்கு 750 யூனிட் வரைக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. மின்கட்டணத்தை பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று தான் செலுத்தி வந்தனர்.
ஆனால், தற்போது மின்கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்திக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், பலரும் ஆன்லைன் மூலமாக மின்கட்டணத்தை செலுத்தாமல் மின்சார வாரிய அலுவலகத்துக்கு நேரில் சென்று தான் கட்டணத்தை செலுத்தி கொண்டு வருகின்றனர். இதனால், மின்கட்டணத்தை செலுத்தும் வேலையை எளிமையாக்க ஆன்லைன் மூலமாகவே மின்கட்டணத்தை செலுத்துமாறு மின்வாரியம் பொது மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
மின்கட்டணத்தை செலுத்த பொதுமக்கள் அதற்கான ஆப் மற்றும் இணையதள முகவரியை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மேலும், மின்கட்டணத்தை போன் பே, பே.டி.எம் மற்றும் ஜி.பே மூலமாகவும் செலுத்த முடியும். மேலும், டான்ஜெட்கோ என்கிற செயலியின் மூலமாகவும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலமாக மின்கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.