ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
By: Karunakaran Fri, 26 June 2020 12:06:14 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலகின் பல்வேறு இடங்களில் பலத்த மழை, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. ஜூன் மாத தொடக்கத்தில் சீனாவில் பலத்த கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள 100 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மெக்ஸிகோவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அங்கு மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள சிபா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேற்று அதிகாலை 4.47 மணியளவில் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. பூமிக்கு அடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 5 நிமிடத்துக்கும் மேலாக நீடித்த இந்த நிலநடுக்கத்தால், வீடு, வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
அதிகாலையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வால் திடுக்கிட்டு எழுந்தனர். பின் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ, காயம் அடைந்ததாகவோ எந்த தகவலும் வெளியாகவில்லை.