பிலிப்பைன்சில் 5.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
By: Karunakaran Sun, 12 July 2020 09:47:34 AM
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் தாவோ டெல் சூர் என்ற மாகாணம் உள்ளது. இங்கு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கிப்லாவான் நகரை மையமாக கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவாகியது.
மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிப்லாவான் நகர் மட்டுமின்றி பன்சாலான், மக்சாய்சாய் ஆகிய நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கிருந்த வீடுகள், வணிக வளாகங்கள் போன்ற கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்து கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்களிடையே பீதி ஏற்பட்டது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் ஏதும் இல்லை. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், பல்வேறு நாடுகளில் கனமழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் மக்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.