பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பொதுமக்கள் பீதி
By: Monisha Tue, 18 Aug 2020 2:00:37 PM
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை 5.30 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 451 கி.மீ தென்கிழக்கில் இருந்ததாகவும், கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதை கண்டு பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏதாவது சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.