பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
By: Karunakaran Tue, 18 Aug 2020 4:13:38 PM
உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், பல இடங்களில் மக்கள் இயற்கை பேரிடர்களால் அவதியடைந்து வருகின்றனர். பூகம்பம், கனமழை, நிலச்சரிவு, வெள்ளம் போன்றவற்றால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டிலே பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று காலை 5.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து 451 கி.மீ. தென்கிழக்கில் இருந்ததாகவும், கடலுக்கு மேற்பரப்பில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் தாக்கியதாகவும் தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின்போது, அங்கிருந்த வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் போன்ற பல கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.