பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
By: Karunakaran Sat, 18 July 2020 10:13:42 AM
தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் பப்புவா நியூ கினியா என தீவு நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கோகோடா பிராந்தியத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவாகியது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 85 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கோகோடா பிராந்தியத்தில் உள்ள பல நகரங்களில் இந்த நிலநடுக்கம் பயங்கரமாக ஏற்பட்டது.
சில வினாடிகளுக்கு மேல் இந்த நிலநடுக்கம் நீடித்தது. இந்த நிலநடுக்கத்தின் போது அங்கிருந்த வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் போன்றவை பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் கடும் பீதியடைந்து அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்பட்டதாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது பல நாடுகளில் தொடர்ந்து இயற்கை பேரிடர்களால் பாதிப்பு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.