- வீடு›
- செய்திகள்›
- அரசியலுக்கு வந்திருந்தால் மிகப்பெரிய சக்தியாகி இருப்பார் பிரபாகரன்; சரத் பொன்சேகா பேட்டி
அரசியலுக்கு வந்திருந்தால் மிகப்பெரிய சக்தியாகி இருப்பார் பிரபாகரன்; சரத் பொன்சேகா பேட்டி
By: Nagaraj Tue, 02 June 2020 1:17:43 PM
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ள விடங்கள் வருமாறு:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடைசி துப்பாக்கி குண்டு வரை எதிர்கொண்டார். அதனால் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை எப்போதும் இருக்கிறது. பிரபாகரன் அமைதி வழியை ஏற்று அரசியலுக்கு திரும்பியிருக்கலாம். அவர் அரசியலில் இருந்திருந்தால் இப்போது மிகப் பெரிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்திருப்பார்.
விடுதலைப் புலிகளின் கே.பி, கருணா, பிள்ளையான் போன்றவர்கள் இலங்கை அரசியல்வாதிகளுடன் கை கோர்த்துக் கொண்டு செயல்படுகின்றனர். பிரபாகரனும் அப்படி செய்திருந்தால் ஒட்டுமொத்த வடக்கும் கிழக்கும் அவரது கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்திருக்கும். விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச நாடுகள் நிதி உதவியும், ஆயுத உதவியும் அளித்திருந்தன.
2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது மேற்குலக நாடுகள் அந்த போரை எப்படியாவது தற்காலிகமாக நிறுத்தலாம் என முனைப்பு காட்டின. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன. அப்போது பாகிஸ்தான், சீனா ஆகியவை எங்களுக்கு ஆயுத உதவியும் கொடுத்தன. இந்தியாவின் நிலைப்பாடு அப்போது வேறானதாக இருந்தது.
இந்தியாவைப் பொறுத்தவரை புலிகளுடனான யுத்தத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விரும்பவும் இல்லை- ஏற்கவும் இல்லை. அதற்கு எதிராக விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடித்தே விடலாம் என்பதாக மட்டுமே இந்தியாவின் நிலைப்பாடு இருந்தது. தாங்கள் சொன்னதை பிரபாகரன் கேட்கவில்லை என்ற கோபம் முதலில் இந்தியாவுக்கு இருந்தது. பின்னர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதால் அந்த கோபம் மிக அதிகமாக இந்தியாவுக்கு இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.