பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றை நீக்க சிகிச்சை
By: Karunakaran Mon, 31 Aug 2020 12:57:40 PM
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீட்டு குளியலறையில் மயங்கி விழுந்ததால் அவர் டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மூளையில் கட்டி இருப்பதை தெரிய வந்தது. பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மூளையில் கட்டி அகற்றப்பட்டது.
ஆனால், ஆபரேஷன் செய்ததை தொடர்ந்து, அவர் கோமா நிலையை அடைந்தார்.மேலும் மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பும், நுரையீரல் தொற்றும், சிறுநீரக கோளாறும் கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதன்பின், அவரது நிலை மோசமடைந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆஸ்பத்திரி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்ந்த கோமாவில் இருக்கிறார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ரத்த அழுத்தம், இதய, நாடித்துடிப்பு சீராக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.