இமாசலப் பிரதேசத்தில் வெடிமருந்து கலந்த உணவை மென்றதால் கர்ப்பிணி பசு காயம்
By: Karunakaran Sun, 07 June 2020 09:48:56 AM
கேரளாவில் சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை வைத்து கர்ப்பிணி யானையை கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வெளியாகின. தற்போது இதுபோன்ற சம்பவம் இமாசலப் பிரதேசத்திலும் அரங்கேறியுள்ளது.
பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில், வெடி வைத்து கொடுக்கப்பட்ட கோதுமை மாவு உருண்டையை கடித்த பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பசுவின் உரிமையாளர் குர்தயால் சிங் பதிவேற்றியது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் மே 26-ம் தேதி நடைபெற்றதாகவும், இந்த கொடூரமான செயலுக்கு தனது அண்டை வீட்டார் தான் காரணம் என பசுவின் உரிமையாளர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனவிலங்கு அதிகாரிகள் கூறுகையில், காட்டு விலங்குகளை கொல்ல, தங்கள் பயிர்களைப் பாதுகாக்க பட்டாசுகளை கோதுமை மாவு உருண்டைக்குள் வைத்து வெடி வைப்பது விவசாயிகளிடையே ஒரு பொதுவான நடைமுறையாகும் என தெரிவித்துள்ளனர்.