கல்வியில் உயர்ந்த ஞானம் பெற்ற மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம்
By: Nagaraj Thu, 27 July 2023 2:39:08 PM
சென்னை: வறுமையின் பிடியில் சிக்கிய போதும் கல்வியில் உயர்ந்த ஞானம் பெற்றவர்தான் அப்துல்கலாம்.
சிறுவயது முதலே வறுமையின் பிடியில் சிக்கினார் அப்துல் கலாம். இருந்தாலும் அந்த கவலையை தூக்கி எறிந்து, குடும்பத்திற்காக வேலைக்கு சென்றார். அப்துல் கலாம், தனது பள்ளிப்படிப்பை இராமேஸ்வரத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தொடங்கினார்.
படிக்கின்ற நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். இவருடைய பள்ளிப்பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந்தார். வெற்றிகரமான தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார்.
கடும் முயற்சியில் 1954ம் ஆண்டு இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் தனக்கு ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
நாட்கள் நகர்ந்தது, 1960 ஆம் ஆண்டு ‘வானூர்தி அபிவிருத்தி அமைத்தல்’ பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் துவங்கினார் அப்துல் கலாம். அதன் முதற்கட்டமாக ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார்.
பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார்.
இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. விருதுகள் இவரால் பெருமை பெற்றது என்றே கூறலாம்.