அமெரிக்கர்கள் பயணங்களில் கவனத்துடன் இருக்க அதிபர் ஜோ பைடன் அரசு எச்சரிக்கை
By: Nagaraj Thu, 04 Aug 2022 10:06:47 AM
அமெரிக்கா: எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்... அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ள நிலையில், வெளிநாடு செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆப்கனிஸ்தானின் காபூலில் பதுங்கி இருந்த அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி, அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இதனை ஞாயிற்றுக்கிழமை இரவு அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தினார். அப்போது பேசிய அவர், தான் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும், அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி
தாக்கப்பட்டதில் அல் ஜவாஹிரிக்கு முக்கியத் தொடர்பு இருந்ததாகக் கூறிய ஜோ
பைடன், எவ்வளவு காலம் ஆனாலும் அமெரிக்கா அதன் எதிரிகளை பழிதீர்க்கும்
என்றார்.
அமெரிக்காவுக்கும், அமெரிக்கர்களுக்கும் எதிராக தொடர்ந்து
செயல்பட்டு வந்தவர் என்பதால் அல் ஜவாஹிரியின் ஆதரவாளர்கள், அமெரிக்கர்கள்
மீது தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதை
அடுத்து ஜோ பைடன் அரசு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில்,
அல் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளுக்குச் செல்லும்
அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் செல்லும் இடங்களில் சூழல் எவ்வாறு
உள்ளது என்பதை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு பயணிக்குமாறு அது
கேட்டுக்கொண்டுள்ளது.