வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என அதிபர் கிம் ஜாங் உன் அறிவிப்பு
By: Karunakaran Sun, 11 Oct 2020 3:17:44 PM
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இருப்பது இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளும் தடுமாறி வருகின்றன.
இந்நிலையில், தங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்து உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளார். வடகொரியாவின் ஆளும் கட்சியின் 75-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதை கொண்டாடும் வகையில் அந்நாட்டின் தலைநகரில் ராணுவ அணுவகுப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் கிம் ஜங் உன் பேசுகையில், வடகொரியாவை சேர்ந்த யாருக்கும் கொரோனா தொற்று பரவவில்லை. வைரஸ் பரவலை தடுக்க உதவிய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார். இந்த தகவலின் உண்மைத்தன்மை மிகுந்த கேள்விக்குறியாக உள்ளது.
இதுகுறித்து தென்கொரியா தரப்பில் கூறுகையில், வடகொரியாவில் யாருக்கும் கொரோனா பரவவில்லை என கிம் தெரிவித்து வரும் நிலையில் இந்த தகவலின் உண்மைத்தன்மை மிகுந்த கேள்விக்குறியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் எல்லையை பகிரும் வடகொரியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தில் கொரோனா பரவத்தொடங்கியதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதமே தனது நாட்டின் எல்லைகள் அனைத்தையும் மூடியது குறிப்பிடத்தக்கது.