- வீடு›
- செய்திகள்›
- இஸ்ரேலுடன் 6 அரபு நாடுகள் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு
இஸ்ரேலுடன் 6 அரபு நாடுகள் விரைவில் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவிப்பு
By: Karunakaran Wed, 16 Sept 2020 09:40:52 AM
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அரபு நாடுகளான எகிப்து, ஜெர்டான், லெபனான், ஈராக், சிரியாவும், பாலஸ்தீனமும் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டபோது, இஸ்ரேல் வெற்றி பெற்றது. அதன்பின், இஸ்ரேல் உடனான மோதல் போக்கு அதிகரித்து வந்தது. பின்னர் இஸ்ரேல் உடனான ராஜாங்கம், வர்த்தகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன.
1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. பல ஆண்டுகளாக வேறு எந்த அரபு நாடும் இஸ்ரேலுடனான உறவை மேம்படுத்தாமல் மோதல் போக்குடன் இருந்தது. அதன்பின், அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்தார். அதன் பயனாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள சம்பதம் தெரிவித்தன.
இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்ட 3-வது மற்றும் 4-வது அரபு நாடுகள் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் இணைந்தன. இந்நாடுகளுக்கு இடையேயான அமைதி ஒப்பந்தம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் வெள்ளைமாளிகையில் நேற்று கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக அதிபர் மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினை அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார்.
அதன்பின் டிரம்ப் பேட்டி அளித்தபோது, மேலும் 5 முதல் 6 அரபு நாடுகளுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கூடிய விரைவில் அவர்களும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளன என்று தெரிவித்தார். இருப்பினும், அவை எந்தெந்த நாடுகள் என்ற தகவலை டிரம்ப் வெளியிடவில்லை. மத்திய கிழக்கு பகுதியில் ஈரானின் ஆதிக்கத்தை குறைக்கவே இஸ்ரேலுடன் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் அமைதி ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.