ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை சாப்பிட்ட பிறகு ஆரோக்கியமாக உணரும் அதிபர் டிரம்ப்
By: Nagaraj Fri, 29 May 2020 10:46:33 PM
ஆரோக்கியமாக உணர்கிறார்... ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்ட பிறகு அதிபர் டிரம்ப் ஆரோக்கியமாக உணர்கிறார் என வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேரிய தடுப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனாவை தடுப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனையடுத்து, இம்மருந்து உண்மையில் கொரோனாவை குணப்படுத்துமா என உலக நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தோ அல்லது வேறு ஏதேனும் தடுப்பு மருந்தோ, கொரோனாவை குணப்படுத்தும் என இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை. மாறாக, இது கொரோனாவை தடுக்காது, இதயப் பிரச்னையை ஏற்படுத்தும் என சில ஆய்வுகள் கூறின.
இதற்கிடையே, இரண்டு வாரங்களாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாக, டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில், அம்மருந்தை உட்கொண்ட பிறகு டிரம்ப், உடல் ரீதியாக ஆராக்கியமாக உணர்வதாக வெள்ளை மாளிகை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஹென்றி போர்டு மருத்துவமனையில் 3000 சுகாதாரப் பணியாளர்கள் பரிசோதனைக்காக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உட்கொண்டு வருவதாகவும், அது எதிர்பார்த்த பலனை அளிப்பதாகவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்புசெயலர் மெக்கெனானி தெரிவித்துள்ளார்.