இன்று முதல் பணிகளை தொடங்குவார் ஜனாதிபதி டிரம்ப்
By: Nagaraj Sat, 10 Oct 2020 09:42:43 AM
அரசு பணிகளை மீண்டும் ஜனாதிபதி டிரம்ப் தொடங்குவார் என்று வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் டிரம்புக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவர் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டே அலுவலக பணிகளை கவனித்து வந்த டிரம்ப், 4 நாட்களுக்கு பிறகு கடந்த 5-ம் தேதி வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். இந்நிலையில் டிரம்புக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை முடிவடைந்ததாகவும் இன்று (சனிக்கிழமை) முதல் அவர் தனது அரசு பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும் வெள்ளை மாளிகை தலைமை மருத்துவர் சீன் கான்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜனாதிபதி தனது மருத்துவ
குழுவால் பரிந்துரைக்கப்பட்ட கொரோனாவுக்கான சிகிச்சையை முடித்தார்.
ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு திரும்பியது முதல் அவரது உடல் நிலை
சீராக உள்ளது. நோயின் முன்னேற்றத்தை குறிக்க எந்த அறிகுறிகளும் இல்லாமல்
உள்ளது.
ஜனாதிபதி டிரம்புக்கு கொரோனா கண்டறியப்பட்டதிலிருந்து இன்று
10-வது நாளாக இருக்கும். மேலும் குழு நடத்திவரும் மேம்பட்ட நோயறிதல்களின்
பாதையின் அடிப்படையில் இன்று ஜனாதிபதி பொது வாழ்க்கைக்கு பாதுகாப்பாக
திரும்புவதை நான் முழுமையாக எதிர்பார்க்கிறேன்". என்று தெரிவித்துள்ளார்.