அதிமுக ஒருங்கிணைப்பாளரிடம் ஆதரவு கோரிய குடியரசுத்தலைவர் வேட்பாளர்
By: Nagaraj Sat, 25 June 2022 02:42:37 AM
புதுடில்லி: ஆதரவு கோரினார்... டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் தேசிய ஜனநாயகக் கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று மாலை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நேற்று டெல்லி வந்த அவர் பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்களை நேரில் சந்தித்துப் பேசினார்.
இன்று (ஜூன் 24) நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் தம்பிதுரை எம்பி ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிலையில் இன்று மாலை குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்வின் போது தேனி மக்களவைத் தொகுதி எம்பி ரவீந்திரநாத் குமார், மனோஜ் பாண்டியன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பன்னீர்செல்வம், குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு மனப்பூர்வமாக முழு ஆதரவு உண்டு. அதிமுகவின் ஆதரவைக் கேட்டு விரைவில் அவர் சென்னை வருவதாகத் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.