- வீடு›
- செய்திகள்›
- சென்னையில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை… அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு
சென்னையில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை… அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு
By: Nagaraj Fri, 15 Sept 2023 7:03:45 PM
சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோவை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் தனி அறைகள் அமைக்கப்பட்டு தனி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், யாராவது அனுமதிக்கப்பட்டால் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் நோய்த் தொற்றுக்கு மேம்பட்ட சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், கரோனா, பன்றிக் காய்ச்சல், காசநோய் போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சை பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதுவரை யாரும் அந்த அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவில்லை.
இருந்த போதிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கென அனைத்து வசதிகளுடன் சிறப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் மற்றும் ஏப்ரான்களும் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.