- வீடு›
- செய்திகள்›
- பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மைநீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்
பாகிஸ்தானில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மைநீக்க தண்டனை வழங்க பிரதமர் இம்ரான் கான் ஒப்புதல்
By: Karunakaran Wed, 25 Nov 2020 4:14:04 PM
பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கி தண்டனை வழங்குவதற்கும், கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான் கான் கொள் கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான அவசர சட்ட வரைவை அமைச்சரவை கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்த கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவு சட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. குற்றவாளிகளை பொது இடத்தில் வைத்து தூக்கிலிடவேண்டும் என சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆண்மை நீக்க தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.