நிலநடுக்கம் ஏற்பட்டபோதும் அமைதியாக நேர்காணலை தொடர்ந்த பிரதமர் ஜெசிந்தா
By: Nagaraj Tue, 26 May 2020 09:02:00 AM
நிலநடுக்கத்தை கண்டு அச்சப்படாத பிரதமர்... நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, டிவி நேரலை நேர்காணலில் பங்கேற்றிருந்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், எவ்வித நடுக்கமும் இன்றி, அமைதியாக நேர்காணலை தொடர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 2017ல் நியூசி.,பிரதமராக பதவியேற்றது முதல் ஜெசிந்தா, பல்வேறு நெருக்கடிகளை திறம்பட கையாள்வதில் பிரபலமானவராக திகழ்ந்து வருகிறார். கடந்தாண்டு நடந்த கிறிஸ்ட்சர்ச் தாக்குதல், எரிமலை வெடிப்பை தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளார்.
திங்களன்று நியூசி.,யின் வடமேற்கு நகரமான லெவினில் 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக வெலிங்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. அப்போது பார்லி.,கட்டிடத்தில் இருந்து ஜெசிந்தா, டிவி நேரலை ஒன்றின் நேர்காணலில் பங்கேற்றிருந்தார்.
'நாங்கள் இங்கே லேசான நிலநடுக்கத்தை சந்திக்கிறோம், ரியான் ' என நெறியாளரிடம் கூறி கொண்டிருக்கும் போதே, கேமரா உள்பட அனைத்து பொருட்களும் குலுங்குகின்றன. 'இங்கே மிகவும் குறிப்பிட்டத்தக்க அளவில் குலுங்குகிறது. நீங்கள் எனக்கு பின்னால் நகர்வதை பார்த்தீர்களானால், பீஹைவ் கொஞ்சம் அதை விட சற்று அதிகமாக நகர்கிறது' என பேசியப்படி, தான் பாதுகாப்பாக இருப்பதாக நெறியாளர்களிடம் கூறிவிட்டு நேர்காணலை தொடர்கிறார்.
நிலநடுக்கத்தை கண்டு அஞ்சாமல், நிதானத்தை கடைப்பிடித்த ஜெசிந்தாவின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்போ, சேதாரமோ ஏற்படவில்லை என ஜெசிந்தா பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இருந்த போதும், சுமார் 30 வினாடிகளுக்கு மேல் குலுங்கியதால் வெலிங்டனில் உள்ள அலுவலகம் மற்றும் வீடுகளில் வசித்த மக்கள், பீதியடைந்து டேபிளுக்கு அடியில் பதுங்கினர்.