இனவெறிக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்பு
By: Karunakaran Sat, 06 June 2020 12:05:52 PM
அமெரிக்காவில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீசாரால் கொல்லப்பட்டார். இதற்கு நீதி வழங்கவேண்டுமென அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து போராட்டங்களை நடத்தி வரும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் அவர்களை விரட்டியடித்து வருகின்றனர்.
பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம் இனவெறிக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு நாடுகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதற்கு ஆதரவாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றார். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென ஜஸ்டின் ட்ரூடோ பேரணியில் இணைந்து நடந்து வந்தது அனைவரையும் ஆச்சர்யமடைய செய்தது. பின்னர், ஜார்ஜ் பிளாய்டுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 9 நிமிடங்கள் முழங்காலிட்டு மவுன அஞ்சலி செலுத்தினார்.
கனடாவின் பல்வேறு நகரங்களிலும் இதுபோன்ற பேரணி நடைபெற்றது. கொரோனா காரணமாக போராட்டக்காரர்கள் ஒன்று கூடவேண்டாம் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி எச்சரிக்கை விடுத்தும், இந்த பேரணியில் கனடா பிரதமர் ட்ரூடோ பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.