- வீடு›
- செய்திகள்›
- நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மிசோரத்திற்கு உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உறுதி
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மிசோரத்திற்கு உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா உறுதி
By: Karunakaran Mon, 22 June 2020 2:50:13 PM
மிசோரம் மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. முதல் நிலநடுக்கம், நேற்று மாலை தலைநகர் ஐசாலில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின், இன்று அதிகாலை 4.10 மணியளவில் சம்பாய் நகரில் இருந்து 27 கிமீ தொலைவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இரண்டாவதாக ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் குறித்து தகவல் அறிந்த பிரதமர் மோடி தொலைபேசி மூலம் மிசோரம் முதல்வர் சோரம்தங்காவை தொடர்பு கொண்டு பேசினார்.
நிலைமையை ஆராய்ந்து, மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என பிரதமர் மோடி முதல்வர் சோரம்தங்காவுக்கு உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மிசோரம் மாநில மக்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்வதாக உள்துறை மந்திரி அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், முதல்வரை தொடர்பு கொண்டும் அமித் ஷா பேசியுள்ளார். இதுகுறித்து முதல்வர் சோரம்தங்கா கூறுகையில், 12 மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு தொடர்பாக அந்தந்த பகுதி எம்எல்ஏ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்த பிரதமர் மற்றும் உள்துறை மந்திரிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.