கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் விரைவில் நலம்பெற பிரதமர் மோடி வாழ்த்து
By: Karunakaran Wed, 08 July 2020 2:05:50 PM
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக கொரோனா அதிகம் பாதித்த நாடாக பிரேசில் நாடு உள்ளது. இந்நிலையில், பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர், கொரோனா வைரசால் உலகமே அச்சத்தில் இருக்கும் போது மக்கள் சமூக விலகல், முகக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என பிரச்சாரம் செய்தவர். லேசான அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், வீட்டிலே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும், அலுவலக பணிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். ஜெயிர் போல்சனரோ விரைவில் குணமடைய பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவருக்கு இந்திய பிரதமர் மோடியும் வாழ்த்து கூறியுள்ளார்.
பிரேசில் அதிபர் விரைவில் நலம்பெற இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், எனது நண்பரும் பிரேசில் அதிபருமான ஜெயிர் போல்சனரோ குணமடைய பிரார்த்தனை செய்வதுடன், எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். உலக சுகாதார அமைப்பும் போல்சனரோ குணமடைய வாழ்த்து கூறியது குறிப்பிடத்தக்கது.