சிங்கப்பூர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
By: Karunakaran Sun, 12 July 2020 10:33:38 AM
சிங்கப்பூரில் பிரதமர் லீ செய்ன் லூங் தலைமையிலான பீப்பிள் ஆக் ஷன் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் 10 மாதங்களில் இவரது ஆட்சி முடிவடைய உள்ளது. இந்நிலையில் இதற்கு முன்பே பிரதமர் லீ தேர்தலை அறிவித்தார். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
இந்த கொரோனா அச்சுறுத்தலை மீறியும் பாராளுமன்ற தேர்தல் சிங்கப்பூரில் ஜூலை 10-ல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது, முககவசம், கையுறைகள் அணிந்தபடி மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு எண்ணிக்கையும் பாதுகாப்புடன் நடைபெற்றது.
இந்த தேர்தலின் முடிவில் சிங்கப்பூர் ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 93 இடங்களில் 83 இடங்களை பீப்பிள் ஆக் ஷன் கட்சி கைப்பற்றியது. இதன் மூலம் லீ செய்ன் லூங் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பூர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற லீ செய்ன் லூங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிங்கப்பூர் பிரதமர் லீ செயின் லூங் வெற்றிக்குப் பாராட்டுகள். சிங்கப்பூர் மக்கள் அமைதியான, வளமான எதிர்காலத்தைப் பெறுவதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.