மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி தொடக்கி வைக்க உள்ளார்
By: vaithegi Thu, 20 Oct 2022 7:41:18 PM
புதுடெல்லி: மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழா .... பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் 'ரோஸ்கர் மேளா' என்ற மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழாவை வரும் 22-ந்தேதி(சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து இந்நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, பல துறைகளில் பணிக்கு சேர்ந்த 75,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்ற உள்ளார். இத்திட்டத்தின்படி நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளின் பணிகளில் சேருவார்கள்.
மேலும் ஏற்கனவே பல துறைகளிலும் காலியாக இருக்கும் மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புமாறு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இதையடுத்து இந்த வேலைவாய்ப்பு இயக்கத்தில் யு.பி.எஸ்.சி., எஸ்.எஸ்.சி., ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் போன்றவை மூலம் தேர்வுகள் நடத்தி ஆட்சேர்ப்பு நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.