70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி
By: Nagaraj Tue, 13 June 2023 11:35:32 PM
புதுடில்லி: ரோஜ்கர் மேளா திட்டத்தில் காணொலி காட்சி மூலம் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ‘ரோஜ்கர் மேளா’ என்ற மெகா வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு பணிக்கான ஆணைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் இன்று காணொலி காட்சி மூலம் 70,126 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில், அரசுப் பணியில் சேர்பவர்களுக்கு இது முக்கியமான காலகட்டம்.
இப்போது புதிதாக பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முயற்சிப்பார்கள்.”அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு வைத்துள்ளோம். இன்று அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் ஆதரவால் இளைஞர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ரோஜ்கர் மேளாவில் இதுவரை 3,58,000 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.