பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
By: Nagaraj Fri, 21 Oct 2022 6:05:13 PM
அகமதாபாத் : வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல்... குஜராத் மாநிலம் தபி மற்றும் வியாராவில் ரூ.1970 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் கூறியதாவது: உங்கள் வளர்ச்சிக்கு முழு மனதுடன் முயற்சிப்பேன். இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தாபி, நர்மதா உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் முழுவதையும் மேம்படுத்துவது தொடர்பானவை. நாட்டில் பழங்குடி மக்கள் நலன் மற்றும் பழங்குடி சமூக நலன் என 2 வகையான கொள்கைகள் உள்ளன.
பழங்குடியின மக்களின் நலனில் அக்கறை இல்லாத கட்சிகள் ஒரு பக்கம். பாஜக போன்ற கட்சி பழங்குடியினர் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது.
பழங்குடி மரபுகளை நாங்கள் மதிக்கிறோம். பழங்குடியின சமூகங்களின் நல்வாழ்வு
எங்களின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது. நாங்கள் எங்கு ஆட்சி செய்தாலும்
பழங்குடியினர் நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
பழங்குடியினர்
நலத்துக்கான பட்ஜெட் கடந்த 7-8 ஆண்டுகளில் 3 மடங்குக்கு மேல்
அதிகரித்துள்ளது. அனைவரின் முயற்சியுடனும், வளர்ச்சியடைந்த குஜராத்தை
வளர்ச்சியடைந்த இந்தியாவாக உருவாக்குவோம் என்று பிரதமர் கூறினார்.