இஸ்ரோ தலைமையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி
By: Nagaraj Sat, 26 Aug 2023 6:34:31 PM
பெங்களூர்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு... கிரீஸில் இருந்து இன்று அதிகாலை பெங்களூர் வந்த பிரதமர் மோடி இஸ்ரோ தலைமையகத்தில் சந்திரயான் 3 வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். சந்திரயான் 3 இந்தியாவின் புதிய விடியல் என்றும் மோடி தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பெங்களூர் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் இஸ்ரோ நோக்கி சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மோடி மோடி என்ற முழக்கம் அதிரவைத்தது. திறந்த காரில் நின்று கதவைப் பிடித்தபடி வந்த பிரதமர் மக்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.
இஸ்ரோ தலைமையகத்தில் சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியை சாதித்த விஞ்ஞானிகளை பிரதமர் மோடி சந்தித்தார். சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல், திட்ட இயக்குனர் கல்பனா, உள்ளிட்ட குழுவினரையும், இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் இதர அறிவியாலளார்களை நேரில் சந்தித்து, பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.