லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்
By: Karunakaran Wed, 05 Aug 2020 4:50:11 PM
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் 6 ஆண்டாக வைக்கப்பட்டு இருந்த 2,750 டன்கள் எடை கொண்ட அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் வெடித்து சிதறியது. இதனால் பெய்ரூட் நகரமே அதிர்ந்தது. அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்து நகரமே உருக்குலைந்தது.
இந்த வெடி விபத்தில் தற்போதுவரை 73 பேர் பலியாகியதாகவும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கியது. தற்போது, லெபனான் வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், பெய்ரூட் நகரத்தில் நடந்த மிகப்பெரிய வெடி விபத்து அதிக அளவில் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அடைந்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். லெபனான் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் கூடும் என அஞ்சப்படுகிறது.