பிரதமர் மோடி பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம் - ராகுல் காந்தி
By: Karunakaran Fri, 23 Oct 2020 4:33:59 PM
பீகார் மாநிலத்தில் வரும் 28ம்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
தற்போது நவடா மாவட்டம் ஹிசுவாவில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி அவர்களே பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம் என்று கூறினார்.
மேலும் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கார் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கினீர்களா? கடந்த தேர்தலில் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால் யாரும் வேலை பெறவில்லை. பொது இடத்தில் பிரதமர் பேசும்போது ராணுவம், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என்று கூறுகிறார். ஆனால் அவர் வீட்டிற்கு வந்ததும், அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் என்று கூறினார்.
மேலும் பேசுகையில், விவசாயிகளை பாதிக்கும் வகையில் 3 புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு உருவாக்கியுள்ளது. அவர்கள் பீகாரில் மண்டிகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலையை முதலில் முடிவுக்கு கொண்டுவந்தனர். இப்போது அவர்கள் அதை நாடு முழுவதிலும் செய்கிறார்கள். லட்சக்கணக்கானோரை வேலையில்லாமல் ஆக்கப்போகிறார் பிரதமர். அவர் எங்கு சென்றாலும் பொய்களை மட்டுமே சொல்கிறார் என ராகுல் காந்தி என்று குற்றம் சாட்டினார்.