எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி இன்று திடீரென ஆய்வு
By: Karunakaran Fri, 03 July 2020 1:07:31 PM
லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே கடந்த 15-ஆம் தேதி பயங்கர மோதல் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலுக்கு பின் எல்லை பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இருப்பினும் இருநாட்டு அதிகாரிகள் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு அதிரடியாக சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. மேலும் 38 ஆயிரம் கோடி செலவில் முப்படைகளும் தேவையான கருவிகளை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. போர் மூளும் பட்சத்தில் ஆயத்தமாக இருக்க இந்திய ராணுவம் தயார்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று லடாக்கில் உள்ள லே பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். அவருடன் முப்படை தளபதி பிபின் ராவத்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இருநாட்டுகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை சரிவரவில்லை எனில் போர் ஏற்படலாம். தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நீடித்து வருகிறது.