- வீடு›
- செய்திகள்›
- பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களின் வீரத்தில் சாதி, பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் - சிவசேனா
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களின் வீரத்தில் சாதி, பிராந்திய பாகுபாடு காட்டுகிறார் - சிவசேனா
By: Karunakaran Sat, 27 June 2020 11:11:20 AM
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனால் இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாகுபாடு காட்டுவதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில், லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த சீனா உடனான சண்டையில் பீகாரை சேர்ந்த ராணுவ படைப்பிரிவின் வீரத்தை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகிறார். மஹர், மராத்தா, ராஜ்புத், சீக்கியர்கள், கோர்க்கா, டோக்ரா ஆகிய படைப்பிரிவினர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகையிலை மென்று கொண்டிருந்தார்களா? என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அதில், மராட்டியத்தை சேர்ந்த வீரர் சுனில் காலே என்பவர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் உடனான சண்டையில் வீரமரணம் அடைந்தார். பீகாரில் தேர்தல் வருவதால் இந்திய ராணுவத்தில் சாதி மற்றும் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாகுபாடு காட்டுகிறார். இது ஒரு அரசியல் நோய், கொரோனா வைரசை விடவும் இது மோசமானது என்று சிவசேனா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.