- வீடு›
- செய்திகள்›
- இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலியில் தொடர்பு கொண்டு பேச முடிவு
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலியில் தொடர்பு கொண்டு பேச முடிவு
By: Karunakaran Mon, 21 Sept 2020 6:28:22 PM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் காணொலி காட்சி மூலம் முக்கிய தலைவர்களுடன் பேசி வருகிறார். ஆஸ்திரேலியா, ஜப்பான் நாட்டு தலைவர்களுடன் சமீபத்தில் காணொலி காட்சி மூலம் பேசினார். இந்நிலையில் வருகிற 26-ந்தேதி இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் காணொலியில் தொடர்பு கொண்டு பேச பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
அண்டைநாடுகளுடன் சுமூக உறவை மேம்படுத்தும் நடவடிக்கையாக இந்த கலந்துரையாடல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவை சுற்றி அமைந்துள்ள அண்டைநாடுகளில் மாலத்தீவு, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளுடன் இந்தியா சுமூக உறவு வைத்துள்ளது. ஆனால் நேபாளமும், இலங்கையும் சீனாவுக்கு ஆதரவாக மாறி இருக்கின்றன.
சீனா பக்கம் இந்த நாடுகள் முழுமையாக சாய்வதை தடுக்க பிரதமர் மோடி அந்த நாடுகளுடன் பேச ஆரம்பித்துள்ளார். அதன்படி, வருகிற 26-ந்தேதி ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தப்படுகிறது. ஆனால் நேபாளத்துடன் மட்டும் இன்னும் முழுமையான உறவு சீரடையவில்லை. இருப்பினும், பிரதமர் மோடி பிறந்த தினத்தன்று நேபாள பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பின்னர் 2 ரெயில்களை நேபாளத்துக்கு இந்தியா பரிசாக வழங்கியது. நேபாளத்தையும் மீண்டும் நட்பு நாடாக மாற்ற இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. லடாக் மோதலுக்கு பின் இந்திய-சீன உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா மற்ற அண்டை நாடுகள் சீனாவின் பக்கம் சாயாமல் இருக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.