- வீடு›
- செய்திகள்›
- இஸ்ரேலில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் நேட்டன்யாஹூ அறிவிப்பு
இஸ்ரேலில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் நேட்டன்யாஹூ அறிவிப்பு
By: Karunakaran Tue, 15 Sept 2020 09:08:35 AM
உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இஸ்ரேல் 24-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, 1,108 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இஸ்ரேலில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் மீண்டும் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக பிரதமர் நேட்டன்யாஹூ தெரிவித்துள்ளார். மேலும் அவர், வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு நாடு தழுவிய முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறினார்.
இதற்கு முன், கொரோனா வைரஸ் காரணமாக இஸ்ரேலில் கடந்த மார்ச் மாத இறுதியில் பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு மே மாத தொடக்கத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது, 2-வது முறையாக நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தும் முதல் நாடாக இஸ்ரேல் உள்ளது.இந்நிலையில் நாடு தழுவிய முழு ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலின் வீட்டு வசதித் துறை மந்திரி யாகோவ் லிட்ஸ்மேன் பதவி விலகியுள்ளார்.
யூத பண்டிகை நாள்களுக்கு முன்னதாக இத்தகைய பொது முடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என யாகோவ் லிட்ஸ்மேன் குற்றம் சாட்டியுள்ளார். யாகோவ் லிட்ஸ்மேன் ஏற்கெனவே சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் ஆவார்.