ஐவரிகோஸ்ட் நாட்டின் பிரதமர் உடல்நிலை பாதிப்பு காரணமாக உயிரிழப்பு
By: Karunakaran Fri, 10 July 2020 11:33:29 AM
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக அமடோ கோன் கூலிபாலி என்பவர் இருந்து வந்தார். இவருக்கு 61 வயதாகிறது. கடந்த 2012-ம் ஆண்டு அமடோ கோன், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்று 2 மாதங்கள் சிகிச்சை செய்து சமீபத்தில் நாடு திரும்பினார்.
நேற்று முன்தினம் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றபோது, அவர் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டதால், உடனே அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளராக அமடோ போட்டியிட இருந்தார்.
தற்போது அவரது மரணம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் அமடோவின் மறைவுக்கு அதிபர் ஒட்டாரா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 30 ஆண்டு காலம் எனது நெருங்கிய கூட்டாளியாக இருந்ததுடன் எனது தம்பியாகவும், மகனாகவும் விளங்கிய அமடோவுக்கு மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டின் மீது மிகுந்த விசுவாசம், பக்தி மற்றும் அன்பு கொண்ட ஒரு அரசியல் தலைவரின் நினைவுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை பாரீஸ் நகரில் சிகிச்சை முடித்து வந்தபோது, அதிபருடன் சேர்ந்து நமது நாட்டை முன்னேற்றுவதற்காகவும், கட்டியெழுப்புவதற்காகவும் என் பணியைத் தொடர்வதற்காக நான் திரும்பி வந்துள்ளேன் என்று பிரதமர் அமடோ கூறிய ஒரு வார காலத்துக்குள் அவர் உயிரிழந்திருப்பது அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.