பிரதமர் மோடிக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்த நேபாள பிரதமர்
By: Karunakaran Sat, 15 Aug 2020 4:16:19 PM
இந்தியாவில் இன்று 74-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய சுதந்திர தினத்தையொட்டி, பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியும் இந்திய சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நேபாள பிரதமர் ஒலி தங்கள் நாட்டின் சார்பாக இந்தியா மக்களுக்கும், அரசுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை கூறினார். மேலும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் ஒலி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி சுதந்திர வாழ்த்து தெரிவித்த நேபாள பிரதமர் ஒலிக்கு நன்றியை தெரிவித்தார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை வழங்க ஆதரவு தெரிவித்துக்கொண்டனர். எல்லை விவகாரத்தில் இந்தியா-நேபாளம் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல்கள் நிலவி வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக நேபாளத்திற்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு தரும் என பிரதமர் மோடி நேபாள பிரதமர் ஒலியிடம் உறுதியளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பிரதமரும் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.