வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்துவது குறித்து பிரதமர் ராஜபக்ஷ ஆலோசனை
By: Nagaraj Sun, 30 Aug 2020 08:56:58 AM
அனைவருக்கும் வீடமைப்புத் திட்டம்... குறைந்த வருமானம் பெறுவோர், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் அரச ஊழியர்களை இலக்காகக் கொண்டு எதிர்காலத்தில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் வீடமைப்புத் திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பத்தரமுல்லையில் அமைந்துள்ள வீடமைப்பு அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலே இந்தத் திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது நகர்ப்புறங்களில் மக்கள் குடியிருப்பிற்காக ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் யாருடைய தலையீட்டிற்கும் உட்பட்டு வணிக நிலையங்களுக்கு ஒதுக்கிக் கொள்ளாது இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும்படி பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கடலில் கழிவுகள் சேர்வதை தடுக்கும் நடவடிக்கையாக ஆறுகளில் கழிவுகளை சேர்வதை தடுக்கும் நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு பிரதமர் பணிப்புரை விடுத்தார். அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கு மேலதிகமாக போட்டித்தன்மையின்றி தனியார் துறையின் திட்டங்களுக்கு வழங்கவேண்டிய முக்கியத்துவம் குறித்து இலங்கை பொறியிலாளர் நிறுவனத்திற்கு பிரதமரினால் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் கடந்த அரசில் நிறைவு செய்யப்படாத திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து அவற்றை பொதுமக்களுக்காக நிறைவு செய்யுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்தார் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, எதிர்வரும் நான்கு மாதங்களில் 28 பில்லியன் ரூபாய் பெறுமதியிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.
கடந்த அரசு முறையின்றி மேற்கொண்ட நியமனம் குறித்த செயற்பாடுகள் காரணமாக
நஷ்டத்தை எதிர்நோக்கும் நிறுவனங்களாக மாறிய அனைத்து நிறுவனங்களும்
எதிர்வரும் டிசெம்பர்- 31ஆம் திகதிக்கு முன்னர் இலாபமீட்டும் நிறுவனங்களாக
மாற்றுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறி
நிமல் பெரேரா நம்பிக்கை வெளியிட்டார்.
அரச காணிகள்
கூட்டுத்தாபனத்தின் மாதாந்த வருவாய் 900 மில்லியன் ரூபாயாக காணப்பட்ட
போதிலும் கடந்த அரசின் முறைகேடான நியமனங்கள் காரணமாக அதன் மாதாந்த
செலவீனம், 166 மில்லியன் ரூபாயால் அதிகரித்துள்ளதாக அமைச்சின் செயலாளர்
குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கடந்த நான்கரை
வருட காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 450 என்ற
குறைந்த அளவில் காணப்படுவதாக இந்த கூட்டத்தில் வெளியானது.
எதிர்காலத்தில்
பிரதான நகரங்களை இலக்காக கொண்டு கொழும்பு, கண்டி, அநுராதபுரம், மாத்தறை,
குருநாகல் போன்ற நகரங்களில் வாகனத் தரிப்பிடங்களை நிர்மாணிப்பதற்கு
எதிர்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத்
ரணவீர தெரிவித்தார். குறைந்த வருமானம் பெறுவோர், வருமைக் கோட்டுக்கு கீழ்
உள்ளவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அதிக வருமானம் ஈட்டுவோர் மற்றும் அரச
ஊழியர்களை இலக்காக கொண்டு, எதிர்காலத்தில் அமைச்சின் வழிகாட்டலின் கீழ்
வீடமைப்புத்திட்டங்களை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குடிசை
வீடுகளில் வசிப்போருக்கு இலவசமாக வழங்குவதற்காக ஆயிரத்து 400 மாடி வீட்டு
குடியிருப்புகள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குடிசை
வீடுகள் காணப்பட்ட இடத்தில் புதிய வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்துவதாக
பிரசாத் ரணவீர தெரிவித்தார். இதற்கு மேலதிகமாக, 608 நடுத்தர வர்க்க வீடுகள்
அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் 800 வீடுகளின்
நிர்மாணப்பணிகள் 2021 ஆம் ஆண்டில் நிறைவடையும் வகையில் அரச ஊழியர்களுக்காக
காத்துள்ளது.
இந்த வீடமைப்பு திட்டங்களுக்கு மேலதிகமாக எந்தவொரு
நபரும் விண்ணப்பித்து கொள்வனவு செய்யக்கூடிய வகையில் 3 ஆயிரத்து 300
வீடுகள் 10 திட்டங்களின் கீழ் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படுமென பிரசாத்
ரணவீர மேலும் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை 8
ஆயிரத்து 701 வீடுகளை நிர்மாணித்தள்ளதுடன், எதிர்வரும் ஆண்டில் வீடமைப்பு
அபிவிருத்தி அதிகாரசபையில் 6 பில்லியன் ரூபாய் வருவாய் எதிர்பார்ப்பதாக
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரேணுக பெரேரா
தெரிவித்தார்.
‘செவண’ வீடமைப்பு நிதியம் கடந்த அரசால் முறைகேடு
செய்யப்பட்டதால் அந்த நிதி வீடமைப்பிற்குப் புறம்பாக வேறு நடவடிக்கைகளுக்கு
பயன்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் ரேணுக பெரேரா
குறிப்பிட்டார்.