பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரை
By: Karunakaran Tue, 30 June 2020 10:33:58 AM
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா பரவல் அதிகரித்ததால் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்தது. அதன்பின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டன.
இதனால் கொரோனா பரவல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை கொரோனா நீட்டிக்கப்பட்டபோதும் பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், 2-ம் கட்ட தளர்வுகள் நாளை அமலுக்கு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதுகுறித்த தகவலை பிரதமர் அலுவலகம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
தற்போது கொரோனா ஊரடங்கு, லடாக் மோதல் மற்றும் சீன செல்போன் செயலிகளுக்கு தடை போன்ற முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மத்தியில் பிரதமர் மக்களுக்கு உரையாற்றுவது மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.