அசாம் காசிரங்கா தேசிய பூங்கா வெள்ளத்தால் சேதம் அடைந்ததற்கு இங்கிலாந்து இளவரசர் கவலை
By: Karunakaran Sat, 25 July 2020 7:27:52 PM
சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், அசாம் மாநிலத்தில் பலத்த கனமழை பெய்தது. இதனால் அங்கு வெள்ளம் ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அசாமில் உள்ள புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவில் 120 வன உயிரினங்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. 95 சதவீத பூங்கா பகுதி, வெள்ளத்தில் மூழ்கியது.
கடந்த 2016-ம் ஆண்டு காசிரங்கா தேசிய பூங்காவிற்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே மிடில்டன் ஆகியோர் நேரில் வந்துள்ளனர். இந்நிலையில், வெள்ள சேதம் குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனருக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கடிதம் எழுதியுள்ளார். அதில், காசிரங்கா பூங்காவுக்கும், வன உயிரினங்களுக்கும் ஏற்பட்ட சேதத்தை அறிந்து எனக்கும், கேதே மிடில்டனுக்கும் இதயமே நொறுங்கி விட்டதாக வில்லியம் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், கொரோனா தாக்கத்துக்கு இடையே ஏற்பட்ட உயிரிழப்புகள் வேதனை அளிப்பதாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் இளவரசர் வில்லியம் காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.