ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி
By: Nagaraj Wed, 14 June 2023 6:52:14 PM
சென்னை: மருத்துவமனைக்கு வந்த நீதிபதி... சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சருக்கு இதயத்தில் 3 அடைப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்நிலையில், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்துள்ளார்.
செந்தில் பாலாஜியை காவலில் வைக்குமாறு அமலாக்கப்பிரிவு கோரும் போது அதற்கு எதிராக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவன் வாதாட உள்ளார். கைது செய்யப்படுவதற்கு முன் நோட்டீஸ் வழங்காதது குறித்த வாதங்களை என்.ஆர்.இளங்கோ முன் வைக்க உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இயலாத நிலை உள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியாததால் மருத்துவமனைக்கே நீதிபதி சென்று, செந்தில் பாலாஜியை காவலில் வைப்பது குறித்து முடிவு செய்ய உள்ளார். செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து காவலில் வைக்க உத்தரவிடுவதற்காக மருத்துவமனைக்கு நீதிபதி வந்தார்.