3-ம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வந்ததையடுத்து மும்பையில் தனியார் அலுவலகங்கள் திறப்பு
By: Karunakaran Tue, 09 June 2020 10:58:44 AM
கொரோனா வைரஸ் காரணமாக மும்பையில் மார்ச் 22-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ஊரடங்கு 5-வது முறையாக ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிர மாநில அரசு 3 கட்ட தளர்வுகளை அறிவித்ததன் பின், மும்பையில் அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டோ, டாக்சிகள் இயங்கப்பட்டன.
மேலும், 15 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது நேற்று 3-ம் கட்ட தளர்வாக மும்பையில் 10 சதவீத ஊழியர்களுடன் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. இந்த தனியார் அலுவலக ஊழியர்கள், பிளம்பர்கள், எலக்ட்ரீசியன் போன்ற விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்காக பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட்டன.
பெஸ்ட் பஸ்சுக்காக விக்ரோலி, பாண்டுப், தானே, மலாடு என பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்ததால், சுமார் 75 நாட்களுக்கு பின் மும்பை சுறுசுறுப்பாக காணப்பட்டது. ஆனால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் அடித்துபிடித்து பஸ்களில் ஏறினர்.மேலும் அங்குள்ள பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ், லோயர் பரேல், அந்தேரி, சாந்தாகுருஸ் போன்ற மேற்கு புறநகர் பகுதிகள், பவாய் போன்ற இடங்களில் நேற்று மக்கள் அதிகமாக இருந்தனர்.
பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பை தவிர தானே, நவிமும்பை, புனே, நாக்பூர் என பல பகுதிகளில் நேற்று முதல் மாநில அரசு அறிவித்த தளர்வுகள் அமலுக்கு வந்தன. தென்மும்பையில் உள்ள பல பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.