2023ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது தனியார் ரயில் சேவை; ரயில்வே வாரிய தலைவர் உறுதி
By: Nagaraj Fri, 03 July 2020 10:18:05 AM
2023ல் தனியார் ரயில் சேவை... ''இந்தியாவில், தனியார் ரயில் போக்குவரத்து, வரும், 2023, ஏப்ரல் முதல் துவங்கும்,'' என, இந்திய ரயில்வே வாரியத்தின் தலைவர், வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே, தனியார் மூலம், 151 நவீன ரயில்களை, 109 வழித்தடங்களில் இயக்க முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதியுள்ள நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: வரும், 2023 ஏப்ரல் முதல், தனியார் ரயில் போக்குவரத்தை துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ரயில்வே தனியார் மயமாக்கப்படுவதாக கருத வேண்டாம். 2,800 ரயில் சேவையில் 5 சதவீதம் மட்டுமே தனியாருக்கு அளிக்கப்படும்.
தனியார்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்தி
சேவையை மேற்கொள்ள வேண்டும். விமானம், சொகுசு பஸ் கட்டணங்களின் அடிப்படையில்
தனியார் ரயில் கட்டணம் நியாயமான முறையில் நிர்ணயிக்கப்படும்.
மேலும்
ரயில் தடம், ரயில் நிலையங்கள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை
பயன்படுத்த தனியாரிடம் கட்டணம் வசூலிக்கப்படும். வருவாயில் குறிப்பிட்ட
பங்கை, இந்திய ரயில்வேக்கு வழங்க வேண்டும். ரயில்களை குறித்த நேரத்தில்
இயக்கும் விதியை கடைப்பிடிக்க வேண்டும். தவறினால், நிறுவனங்களுக்கு அபராதம்
விதிக்கப்படும். தனியார் ரயில்கள் மூலம், குறைந்த செலவில் மேம்பட்ட
தொழில்நுட்பத்தில் மிகச் சிறப்பான சேவையை பயணியர் பெற முடியும். இவ்வாறு,
அவர் கூறினார்.
இந்தியாவில் ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள,
பம்பார்டியர் இந்தியா, அதானி போர்ட்ஸ், டாடா ரியாலிட்டி, பிரான்சின்,
அல்ஸ்தாம், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டல்கோ, மெக்குயர் குழுமம் ஆகியவை
ஆர்வமாக உள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.