தனியார் பள்ளி வாகனங்களை ……..வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு
By: vaithegi Fri, 10 June 2022 07:50:11 AM
செங்கல்பட்டு: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் உள்ளதால் வருகிற 13-ந் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தபட்டு பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தனியார் வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? அதில் அனைத்து வசதிகளும் உள்ளதா? என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து செங்கல்பட்டு வட்டார போக்குவரத்துக்குட்பட்ட செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. இப்பள்ளிகளில் மாணவர்கள் வசதிக்காக இயக்கப்படும் சுமார் 220-க்கும் மேற்பட்ட வேன் மற்றும் பஸ்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி வாகனத்தை இயக்க, டிரைவர் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ளாரா? குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவரா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பஸ்சில் இருக்கை, மேல்பலகை உள்ளிட்டவை உறுதியாக உள்ளதா? வேகக்கட்டுப்பாடு கருவி உள்ளதா? அவசரகால வழி உள்ளதா? முதலுதவி சிகிச்சை பெட்டி, முக்கியமாக ஒவ்வொரு பஸ்களிலும் கேமராக்கள் உள்ளனவா? பள்ளி வாகனங்கள் விபத்துக்குள்ளானால் ஓட்டுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதும் குறித்து ஆய்வு செய்தனர்.
பழைய வாகனங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதற்கான உரிய சான்று பெற்று அதன் பிறகே மாணவர்களை வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.