- வீடு›
- செய்திகள்›
- தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல - உத்தவ் தாக்கரே ஆதங்கம்
தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது சரியல்ல - உத்தவ் தாக்கரே ஆதங்கம்
By: Karunakaran Tue, 07 July 2020 1:18:51 PM
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மராட்டியத்தில், பொருளாதரத்தை மீட்டெடுக்க தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், தொழில் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஊதியத்தை குறைப்பது மற்றும் பணி நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவலை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக மாநில அரசு சார்பில் உருவாக்கப்பட்டு உள்ள ‘மகாஜாப்ஸ்' என்ற வலைதளத்தை நேற்று துவங்கி வைத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசுகையில்,மராட்டியத்தில் தொழிற்துறைகள் செயல்பட அரசு அனுமதி அளித்ததை அடுத்து, ஊரடங்கு காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் வர தொடங்கியுள்ளனர். இன்று நமக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் தொழிலாளர்கள் இல்லை என்று கூறினார்.
மேலும் அவர், பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை குறைக்க தொடங்கியுள்ளன. மேலும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்கின்றன. இது சரியல்ல. இந்த பிரச்சினை குறித்து தொழில் அதிபர்களுடன் விவாதிக்கப்படும். மகாஜாப்ஸ் வலைதளம் காலத்தின் தேவை. இந்த அமைப்பு வெளிப்படையான முறையில் செயல்படும். இந்த வலைதளத்தை பயன்படுத்தி வேலைக்கு விண்ணப்பிப்பவர்களில் எத்தனை பேர் உண்மையில் வேலை பெறுகிறார்கள் என்பதை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.