- வீடு›
- செய்திகள்›
- பொது இடங்களில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை பயன்பாட்டுக்கு தடை - தமிழக அரசு
பொது இடங்களில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை பயன்பாட்டுக்கு தடை - தமிழக அரசு
By: Monisha Wed, 01 July 2020 09:59:58 AM
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் 6-வது கட்டடமாக ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதிவரை நீட்டிக்கப்படுள்ளது. இதனை அமல்படுத்துவதற்கான அரசாணையை நேற்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் ஆட்கள் பங்கேற்க கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதுசார்ந்த சடங்குகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், வேறு நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு குறைவான குழந்தைகள், அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் வெளியில் வரலாமே தவிர மற்றபடி வீட்டிலேயே இருக்க வேண்டும்.
பொது இடங்களுக்கு வரும்போதும், பயணத்தின்போதும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிக்கு குறைந்தபட்சம் 6 அடி இடைவெளி விடப்பட வேண்டும். பொது இடங்களில் மது அருந்துதல், பான், குட்கா, புகையிலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கான அபாயத்தை தவிர்க்கலாம். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஊழியர்கள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதை உறுதி செய்யவேண்டும். ஒவ்வொருவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தங்களின் உடல் நிலையை தொடர்ந்து பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஒவ்வொருவரின் உடல் நிலையை சரியான நேரத்தில் அரசு அறிந்து அவர்களை அபாயத்தில் இருந்து மீட்க முடியும்.
கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படும். என்றாலும், தேவையான பொருட்களை அங்குள்ள வீடுகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கும் வழங்குவதை அந்தப் பகுதிக்கான நிர்வாகம் உறுதி செய்யும். அங்கு நாளொன்றுக்கு இரண்டு முறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும். அங்கு முககவசம் அணிவது மிக, மிகக்கண்டிப்பாக அமல்படுத்தப்படும். அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் கை கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவை கண்டிப்புடன் செயல்படுத்தப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.