ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமல்
By: vaithegi Sat, 09 Sept 2023 3:25:10 PM
ராமநாதபுரம் : தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று வரவுள்ளது. மேலும் அக்டோபர் 30ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படவுள்ளது. எனவே இவ்விருவரின் நினைவு தினங்களை ஒட்டி பல்வேறு ஊர்களையும் சேர்ந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்த வருவார்கள்.
இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு நடவடிக்கையாக இன்று முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரையிலும், மீண்டும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் தடை உத்தரவு அமலில் உள்ள நாட்களில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொதுக்கூட்டம், போராட்டம் நடத்தக்கூடாது என்றும், பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடி நின்று பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மற்ற மாவட்டங்களில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வாகனங்களில் வரும் நபர்கள் தங்களது மாவட்ட டிஎஸ்பி அலுவலகத்தில் முறையான கடிதத்தினை பெற்று வரும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.