Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜோஷிமத் நகரில் விரிசல் விழுந்த கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு

ஜோஷிமத் நகரில் விரிசல் விழுந்த கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு

By: Nagaraj Fri, 13 Jan 2023 7:13:10 PM

ஜோஷிமத் நகரில் விரிசல் விழுந்த கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு

டேராடூன்: வீடுகளை இடிக்க எதிர்ப்பு... உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் பல வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. புதைகுழியாக மாறியுள்ள ஜோஷிமத்தில் உள்ள 2 பெரிய ஹோட்டல் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

இதையடுத்து, அப்பகுதி நிலச்சரிவு அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து, ஆபத்தான கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக நகரில் ஆபத்தான நிலையில் உள்ள 2 பெரிய ஓட்டல்களை இடிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், இடிந்த கட்டடங்களுக்கான இழப்பீடு குறித்து அரசு தெளிவுபடுத்தவில்லை எனக்கூறி, கட்டடங்களை இடிக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

dehradun,joshimath,landslides, ,ஜோஷிமத், டேராடூன், நிலச்சரிவு, நடவடிக்கை, எதிர்ப்பு

பத்ரிநாத் தாம் மாஸ்டர் பிளான் படி நஷ்ட ஈடு கேட்டு ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஹோட்டல் கட்டிடங்கள் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, அங்கு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்களை முதல்வர் தமி ஜோஷிமத் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என முதல்வரிடம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.1.50 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்குவதற்காக சமோலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆபத்தான கட்டிடங்களை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினர்.


இடிந்து விழும் நிலையில் காணப்பட்ட ஹோட்டல் மலரி விடுதி உள்ளிட்ட 2 ஓட்டல் கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர், போலிசார் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :