செய்தியாளரை மிரட்டிய அதிபரை எதிர்த்து போராட்டம்
By: Nagaraj Mon, 24 Aug 2020 5:36:01 PM
அதிபருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம்... ஊழல் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரின் வாயை குத்த விரும்புவதாக பிரேசில் அதிபர் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து சக செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகன் பிளேவியா மற்றும் நண்பர் குயிரோஸ், அரசு ஊழியர்களின் ஊதியத்தை மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இதில் ஜெய்ர் போல்சனாரோவின் மனைவி மைக்கேல் போல்சனாரோவுக்கும் தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில், தலைநகர் பிரேசிலியாவில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர்
ஜெய்ர் போல்சனாரோவிடம் மனைவி மீதான ஊழல் புகார் குறித்து ஓ குளோபோ நிறுவன
செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதில் ஆத்திரமடைந்த அதிபர் உங்கள் வாயை
கைகளால் குத்த விரும்புவதாக மிரட்டல் விடுத்தார்.
இதற்கு மற்ற செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கூட்டத்தை புறக்கணித்து அதிபர் போல்சனாரோ வெளியேறினார்.