கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு கண்டனம் தெரிவித்து தரம்சாலாவில் போராட்டம்
By: Karunakaran Sat, 20 June 2020 2:34:57 PM
லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இரவு இந்தியா-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும் சிலர் பலத்த காயமடைந்தனர். இந்த மோதலால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
எல்லை பகுதியில் பதற்றத்தை தணிக்க இரு தரப்பு அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சீனா நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் எனவும், சீன அதிபருக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் சீனாவைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின்போது, போராட்டம் நடத்தியவர்கள், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும், சீனப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
ஏற்கனவே, சீன உணவுகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியது குறிப்பிடத்தக்கது. சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என எதிர் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.