வரும் 27ம் தேதி வரை சென்னையில் போராட்டங்கள் நடத்தத் தடை; போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
By: Nagaraj Sun, 14 June 2020 10:30:46 AM
தடை விதிப்பு... 'சென்னையில், வரும், 27ம் தேதி வரை, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது' என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் அவசியம் என பொது சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. எனவே வரும் 27ம் தேதி மாலை 4 மணி வரை, சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகள், சாலைகள் மற்றும் தெருக்களில் கூட்டம் கூடக் கூடாது.
அதேபோல, பேரணிகள், உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி போன்ற போராட்டங்களில் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது. என்னால் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அனுமதிக்கப்பட்ட கூட்டங்கள், உண்ணாவிரதம், மனித சங்கிலி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த தடை இல்லை.
அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களில், முற்றிலும் வழிபாடு சம்பந்தப்பட்ட சந்திப்புகள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலம் நடத்தலாம். விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மட்டுமே கூடும், எந்தவொரு சந்திப்புகள் மற்றும் ஊர்வலத்திற்கும் தடை உத்தரவு பொருந்தாது.
திருமணம், இறுதிச்சடங்கு அல்லது குடும்ப நிகழ்வுகள், சந்திப்புகள் நடத்தலாம். மத சடங்குகளின்போது நடத்தப்படும் சந்திப்புகள், ஊர்வலங்களுக்கு தடை இல்லை. மத்திய - மாநில அரசுகள் ஆதரவுடன் நடத்தப்படும் பொதுக்கூட்டங்கள், சந்திப்புகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தலாம். சட்ட ரீதியாக நடத்தப்படும் கூட்டங்களுக்கு தடை இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.