தஞ்சாவூர் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்
By: Nagaraj Mon, 06 June 2022 7:41:17 PM
தஞ்சாவூர்: தஞ்சையில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் ரூ.3.60 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பேசியதாவது:
இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 341 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் மூலம் பல்வேறு ஆக்க பணிகளை மேற்கொண்டு விழிப்புணர்வினை ஏற்படுத்திய லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி யாழினி, கவின்மிகு தஞ்சை இயக்கம் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு 'பசுமை முதன்மையாளர் விருது” மற்றும் தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 3 லட்சத்துக்கான காசோலை, மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியின் மூலம் மாணவன் அஜய் குடும்பத்தாருக்கு கல்லூரி கட்டணம் செலுத்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான காசோலை, சுகந்தி குடும்பத்தாருக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பு காசோலை ஆகியவற்றை வழங்கினார்.
இதில் கூடுதல் கலெக்டர் வருவாய் சுகபுத்ரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் தவவளவன் மற்றும் பலர்கலந்து கொண்டனர்.